ஒரு சமயத்தில், ஒரு ராஜ்ஜியத்தில் மிகச் சிறந்த மதப் போதகர் ஒருவர் இருந்தார். பல்வேறு துறைகளிலும், பரந்து விரிந்த அவருடைய அறிவுத் திறமையால், அந்த ராஜ்ஜியம் முழுவதும் உள்ளவர்கள், இவரை பெருமளவில் போற்றிப் பாராட்டினார்கள். விவேகம் மிக்க; கற்றறிந்த சிறந்த மேதைகளும் இவரை மிகவும் மரியாதைக்கு உரியவராக நடத்தினார்கள். இவ்வாறாக பெரும் அளவு புகழ் அவர் பெற்றிருந்த போதும், தன்னுடைய அறிவுப் புலமையைப் பற்றி, சிறிதளவு கூட கர்வம் அடையாமல் இருந்தார். அறிவும், குணநலனும் இணைந்து இருக்கும் போதுதான், ஒருவரால் உலகாயத வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கான உண்மையான வழியை காண முடியும் என்பதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.
பொதுமக்கள் மட்டும் அல்லாமல், அரசரும் இந்த மத போதகருக்கு பெரிய அளவில், மரியாதை கொடுத்தார். மதப் போதகர் ராஜ சபைக்கு வருகை தரும் போது, அரசர் தன் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து நிற்பார். மதப் போதகர் அவரது இருக்கையில் அமர்ந்த பிறகே, அரசர் உட்காருவார்.
இவ்வளவு மரியாதை கிடைப்பது தனது புலமைக்கா? அல்லது தன்னுடைய சிறந்த குண நலனுக்கா? என்பதை அறிந்து கொள்வதில் அவருக்கு ஒரு பெரிய ஆர்வம் எழுந்தது. இந்த ஆர்வத்தை திருப்தி செய்வதற்கும், உண்மைக் காரணத்தைக் கண்டு பிடிக்கவும் ஒரு திட்டம் வகுத்தார்.
தன்னுடைய திட்டத்தை செயலில் கொண்டு வரும் பொருட்டு, மதப் போதகர் அரசனுடைய கஜானாவை பார்வையிட சென்றார். திரும்பும் போது அங்கிருந்து விலைமதிப்பற்ற 5 முத்துக்களை எடுத்து, தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டார். கஜானாவின் பொறுப்பாளர் இவரது செயலைப் பார்த்து திகைப்பு அடைந்தார். மரியாதைக்குரிய இந்த மதப் போதகரா இப்படி திருடுகிறார்! அவருக்கு பணத்தின் மீது பேராசையா! -- இதை அவரால் நம்பவே முடியவில்லை. அந்த நாள் முழுவதும் இதைப் பற்றி எண்ணியே தன் மனதைக் குழப்பம் அடையச் செய்தார்.
அடுத்த நாள் அரச சபையில் இருந்து, திரும்பும் போது, அந்த மதப் போதகர் திரும்பவும் கஜானாவிற்கு சென்று, 5 முத்துக்களை எடுத்து, தன்னிடம் பத்திரப்படுத்திக் கொண்டார். கஜானா பொறுப்பாளர், மதப் போதகர் மீது வைத்திருந்த மரியாதை இப்போது தேயத் தொடங்கியது.
மூன்றாவது நாளும் இதே சம்பவம் திரும்பவும் நடந்த போது, கஜானா பொறுப்பாளர் தன்னுடைய பொறுமையை இழந்தார். இனியும் இதை தொடரவிடக் கூடாது. இந்த மதப் போதகரின் உள் நோக்கம் மிகவும் மோசமாகிக் கொண்டு வருகிறது என்ற சந்தேகம் இன்று உறுதியாகி விட்டது.
கஜானா பொறுப்பாளர், அரசரிடம் சென்று, நடந்த முழு சம்பவத்தைப் பற்றி விவரமாக எடுத்துக் கூறினார். இந்த தகவலை அறிந்தவுடன், அரசர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். மதப் போதகர் மீது அவர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை முழுவதுமாக சிதைந்து நொறுங்கியது.
நான்காவது நாள், மதப் போதகர் அரச சபைக்கு வரும் போது, அரசர் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை; சிம்மாசனத்தை விட்டு எழுந்து வாழ்த்தவும் இல்லை. இதைக் கவனித்த மதப் போதகர், தனது திட்டம் செயல் படத் தொடங்கி விட்டதற்கு, இது ஒரு அடையாளம் என்று எடுத்துக் கொண்டார். தான் முத்துக்களை எடுத்ததன் நோக்கம் விரைவில் நிறைவேறி விடும் என்ற எண்ணத்தோடு அவர் அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்தார்.
அரச சபையின் நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சபையில் உள்ள மற்றவர்களைப் போல, மதப் போதகரும் வெளியே செல்ல முற்படும் போது, நீங்கள் சிறிது நேரம் இருக்க வேண்டும் என அரசர் கட்டளை இட்டார்.
அனைவரும், வெளியே பிறகு, அரசர் மதப் போதகரிடம்,“ நீங்கள் கஜானாவில் இருந்து சிலவற்றை எடுத்துச் சென்றதாக நான் கேள்விப் பட்டேன். இது சரியா?” என்றார்.
இந்த கேள்விக்கு மதப் போதகர் மவுனமாக இருப்பதைப் பார்த்து, அரசர் கோபம் அடைந்தார். அரசர் தன் குரலை உயர்த்தி, “கஜானாவில் இருந்து முத்துக்களை எடுத்துச் சென்றீர்களா?” என்று கேட்டார். அந்த திருட்டை ஒப்புக்கொள்ளும் பொருட்டு, மதப் போதகர் ‘ஆமாம்’ என்பது போல தலை அசைத்தார்.
அரசர் அடுத்த கேள்வியைக் கேட்டார். “ எத்தனை தடவை, எத்தனை முத்துக்களை எடுத்துச் சென்றீர்கள்? என்றார். பின் சிறிது நேரம் கழித்து, எங்கே அந்த முத்துக்கள்?” என்றார்.
மதப் போதகர் மடித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு சிறிய பொட்டலத்தை தன்னுடைய சட்டைப் பையில் இருந்து எடுத்து அரசர் முன் வைத்தார். அதில் 15 முத்துக்கள் இருந்தன. அவருடைய திருட்டு செயலின் நிரூபணத்தை பார்த்தவுடன், அரசர் கோபமும், வருத்தமும், திகைப்பும் அடைந்தார்.
அரசர் மதப் போதகரைப் பார்த்து, “ஏன் ஐயா! நீங்கள் இப்படி செய்தீர்கள்? உங்கள் தகுதிக்கும், நேர்மைக்கும் இந்த செயல் நல்லதா என்பதை சிறிதளவாவது கவனத்தில் எடுத்தீர்களா? என்றார். இந்த செயல் செய்வதைப் பற்றி நீங்கள் வெட்கப்படவில்லையா?
உங்களுடைய இந்த செய்கையால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேர்த்து வைத்த உங்கள் மதிப்பு, புகழ் அனைத்தையும் இழந்து விட்டீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள்? “ அதையாவது சொல்லுங்கள் என்றார்.
அரசரது மன வேதனையை பார்த்துக் கொண்டிருந்த மதப் போதகர் எல்லாவற்றையும் அரசரிடம் விவரித்துக் கூறினார். மன நிறைவோடு அரசரைப் பார்த்து, “அரச பெருந்தகையே! நான் கஜானாவில் இருந்து முத்துக்களை எடுத்ததன் உள் நோக்கம் என்ன வென்றால், அறிவு, நல்லொழுக்கம் இவற்றில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளத்தான். நன்னெறியோடு சேர்ந்த ஒழுக்கம்தான், முக்கியமானது என்ற என் கருத்து முன்பு இருந்ததைவிட இப்போது மிகவும் தெளிவாகியது.
உங்களிடம் இருந்தும், உங்கள் மக்களிடம் இருந்தும் நான் இதுவரை பெற்றிருந்த அன்பும், மரியாதையும் என்னுடைய அறிவுக்காக அல்ல; என்னுடைய நல் ஒழுக்கத்திற்காகத்தான் என்பதை அறிந்து கொண்டேன். உங்கள் கஜானாவில் உள்ள மிகச் சிறந்த விலைமதிப்பற்ற பொருள் “நல்லொழுக்கம்” – தான்.
உயர்ந்த நன்னெறிகள் என்ற இழைகளால் பின்னப்பட்ட குணாதிசயங்களைப் பெற்றிருக்கும் உங்கள் நாட்டு மக்களை நீங்கள் உற்சாகப்படுத்திப் பாராட்ட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று மதப் போதகர் அரசரிடம் கூறினார். இந்த வழியாக மக்கள் பார்வையில், நல்ல குண நலன்களின் மதிப்பு படிப்படியாக அதிகரித்தது.
ஒரு வலிமையான ராஜ்ஜியத்துக்கான அடிப்படை போடப்பட்டது.
சிறந்த நன்னெறிக் கோட்பாடுகளுடன் கூடிய ஒழுக்கமானது, அறிவின் பெருமையை வெற்றி கொள்ளும் என்பதை வரலாறு பல நூற்றாண்டுக் காலமாக நிரூபித்து வருகிறது.
ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் -- என்ற வள்ளுவரின் வாக்கும் இதைத்தான் நிரூபணம் செய்கிறது.
“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்”.
கருத்துகள்
கருத்துரையிடுக